இந்தியாவில் மீண்டும் 19 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!


இந்தியாவில் மீண்டும் 19 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 Aug 2022 4:18 AM GMT (Updated: 4 Aug 2022 6:30 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு நேற்று 17 ஆயிரத்தை கடந்தது. கடந்த 4 நாட்களாக சரிவை சந்தித்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு நேற்று மீண்டும் 17 ஆயிரத்தைக் கடந்து ஏறுமுகம் காணத்தொடங்கியது. இதன்படி நேற்று 17 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 6 மாநிலங்களில் 1,000-க்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 19 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,40,87,037 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,26,530 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20,419 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,24,029 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,36,478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,05,22,51,408 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,20,676 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,03,006 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 87,67,60,536 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.


Next Story