அதிதீவிர புயலாக வலுப்பெற்றது தேஜ் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்


அதிதீவிர புயலாக வலுப்பெற்றது தேஜ் புயல்:  இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 22 Oct 2023 1:17 AM GMT (Updated: 22 Oct 2023 8:28 AM GMT)

தேஜ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், கடந்த 19ம் தேதி காலை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றைய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபி கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு 'தேஜ்' என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த புயலானது அதி தீவிர புயலாக மாறி, வருகிற 25ம் தேதி அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேஜ் புயல் நேற்றிரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் புயல் அதிக வலுப்பெறும். இன்று மதியம் புயல் இன்னும் அதிக வலுப்பெற கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Next Story