டி.நரசிப்புராவில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது


டி.நரசிப்புராவில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

டி.நரசிப்புராவில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மைசூரு:-

தொடா் அட்டகாசம்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவிற்கு உட்பட்டது முத்தத்தி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி முத்தத்தி கிராமத்தில் தொடா்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. அதாவது அந்த சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, கோழிகள் மற்றும் தெரு நாய்களை வேட்டையாடி வந்தது. அந்தப்பகுதியில் சிறுத்தை நடமாடி வந்ததை பலர் பார்த்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

சிறுத்தை கூண்டில் சிக்கியது

மக்களின் கோாிக்கையை ஏற்று வனத்துறையினர் முத்தத்தி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு இரும்பு கூண்டை வைத்தனா். மேலும் கூண்டில் சிறுத்தையை பிடிக்க இறைச்சியை வைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை கூண்டில் இருந்த இறைச்சியை சாப்பிட வந்தபோது, அந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

இதுபற்றி அறிந்ததும் அந்தபகுதி மக்கள் டி.நரசிப்புரா தாலுகா வனத்துறையினருக்கு தகவல் தொிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னா் வனத்துறையினர் கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றிக் கொண்டு நாகரஒலே வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

கிராமமக்கள் மகிழ்ச்சி

டி.நரசிப்புராவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூண்டில் சிக்கியது 2 வயது பெண் சிறுத்தை என வனத்துறை அதிகாாிகள் தொிவித்தனர்.

1 More update

Next Story