உ.பி.யில் தலித் வாலிபர் மீது காலணிகளால் அடித்து தாக்குதல்; வைரலான வீடியோ


உ.பி.யில் தலித் வாலிபர் மீது காலணிகளால் அடித்து தாக்குதல்; வைரலான வீடியோ
x

உத்தர பிரதேசத்தில் கிராம தலைவர் உள்பட 2 பேர் காலணிகளை கொண்டு தலித் வாலிபரை அடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



முசாபர்நகர்,



உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் தாஜ்பூர் கிராமத்தின் தலைவராக இருப்பவர் சக்தி மோகன் குர்ஜார். ரீட்டா நக்லா கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜே சிங். இவர்கள் இருவரும் தினேஷ் குமார் (வயது 27) என்ற தலித் வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் காலணிகளை கொண்டு அடித்து, தாக்கியுள்ளனர்.

இதன்பின்னர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், சாதி ரீதியிலும் பேசியுள்ளனர். இந்த சம்பவம் அவர்களால் வீடியோ பதிவும் செய்யப்பட்டு உள்ளது. பின்னர், அதனை அவர்களே வைரலாக்கி உள்ளனர். அந்த சமூக மக்களை அவமதிக்கும் நோக்கில் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, நகர எஸ்.பி. ஆர்பித் விஜய்வர்கியா செய்தியாளர்களிடம் கூறும்போது, 2 பேர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிராம தலைவர் சக்தி கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றொரு நபரை தேடி வருகிறோம் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் எதிரொலியாக தலித் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து, பீம் ஆர்மி தொண்டர்கள் சிலர் சாப்பர் காவல் நிலையம் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். இதனால், அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.




Next Story