ஆவணப்படத்துக்கு எதிரான வழக்கு - பிபிசி பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்


ஆவணப்படத்துக்கு எதிரான வழக்கு - பிபிசி பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
x

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக பிபிசி பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார்.

நரேந்திரமோடி தற்போது இந்தியாவின் பிரதமராக உள்ள நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் டெல்லி வன்முறை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்தது.

பிபிசி ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாக இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி தடை விதித்தது

மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனாலும், தடையை மீறி இந்த ஆவணப்படம் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ஆய்வு நடத்தியது. பிபிசி ஆவணப்படம், அதற்கான தடை, அதனை தொடர்ந்து பிபிசி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு சம்பவங்களில் இந்தியா அரசு மீது சில அமைப்புகள் விமர்சனம் செய்தது. குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் இந்திய அரசை விமர்சித்தன.

இதனிடையே, 'இந்தியா: மோடி கேள்விகள்' ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் இணையதளத்தில் இந்த ஆவணப்படம் சட்டவிரோதமாக பதிவேற்றமும் செய்யப்பட்டது. இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த நீதிக்கான விசாரணை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், இந்தியாவுக்கும், அதன் நீதித்துறைக்கும், பிரதமர் மோடிக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் பிபிசி ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, பிபிசி தான் இந்த ஆவணப்படுத்தைத் தயாரித்து வெளியிட்டது. பிபிசி (இந்தியா) அதன் இந்திய கிளைதான். இந்த ஆவணப்படம் இந்தியாவின் நற்பெயருக்கு மட்டுமல்லாது, அதன் நீதித்துறை உள்பட ஒட்டுமொத்த அமைப்பின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் குற்றச்சாட்டை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது என வாதிட்டார்.

இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட அனைத்து வழிகள் மூலமாகவும் பிபிசி (இங்கிலாந்து), பிபிசி (இந்தியா) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story