சுவாமி அய்யப்பனுக்கு எதிராக அவதூறு பேச்சு; நடவடிக்கை கோரி தெலுங்கானாவில் போராட்டம்


சுவாமி அய்யப்பனுக்கு எதிராக அவதூறு பேச்சு; நடவடிக்கை கோரி தெலுங்கானாவில் போராட்டம்
x

தெலுங்கானாவில், சுவாமி அய்யப்பனுக்கு எதிராக அவதூறாக பேசிய நாத்திகர் பைரி நரேசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடந்தது.



ஐதராபாத்,


தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நாத்திகரான பைரி நரேஷ் என்பவர் சுவாமி அய்யப்பனுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து, தெலுங்கானா முழுவதும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடந்தன. பா.ஜ.க. மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நரேசுக்கு எதிராக போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. அதில் புகாரளித்த நபர், நரேஷ் அவதூறாக பேசிய வீடியோவை சமூக ஊடக வலைதளத்தில் பார்த்தேன். அதில், பேசிய விசயங்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கிலும், கேலி செய்யும் எண்ணத்துடனும் உள்ளது தெளிவாக தெரிகிறது.

அய்யப்ப தீட்சை எடுத்த பக்தர்களை புண்படுத்தும் உள்நோக்குடன் பேசியதும் தெரிகிறது. இதனால், தனது மத உணர்வுகளும் அதிகம் புண்பட்டு உள்ளது என புகாரில் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல், மதம் அல்லது மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்குடனான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.

இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அந்த நபர் தப்பியோடி உள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

இந்து தர்மம் மற்றும் இந்து கடவுள்களை துஷ்பிரயோகம் செய்வது, புண்படுத்துவது நாட்டில் ஒரு பேஷன் ஆகி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளார். முறையாக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காத சூழலில், இதுபோன்ற விமர்சனங்களை தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story