டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகஸ்டு 1ந்தேதி குஜராத் பயணம்


டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகஸ்டு 1ந்தேதி குஜராத் பயணம்
x

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வரும் ஆகஸ்டு 1ந்தேதி குஜராத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விவசாயிகளுடன் உரையாடுகிறார்.



வதோதரா,



குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரசை பஞ்சாப்பில் வீழ்த்தி வெற்றி பெற்று, ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி, அடுத்து இமாசல பிரதேசம் மற்றும் குஜராத்திலும் அதிகாரத்திற்கு வரும் முனைப்பில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை வரிசையாக செயல்படுத்தியும் வருகிறது. இதனை தொடர்ந்து குஜராத்திலும் தனது தேர்தல் வேட்டையை ஆம் ஆத்மி தொடங்கி நடத்தி வருகிறது.

இதன்படி குஜராத்துக்கு கடந்த 21ந்தேதி வருகை தந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சூரத் நகரில் மக்களிடையே கூட்டத்தில் பேசும்போது, குஜராத் மக்கள் அனைவருக்கும் நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறி ஆச்சரியப்படுத்தினார்.

இதுதவிர, அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் 24x7 என்ற வகையில் மின்சார வினியோகம் கிடைக்க உறுதி செய்வோம். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டண பில்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறி அசத்தினார். இதனை தொடர்ந்து, அவர் குஜராத்திற்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 26ந்தேதி சோம்நாத் கோவிலுக்கும் அவர் சென்றார்.

இதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 1ந்தேதி மீண்டும் குஜராத்தில் உள்ள சோம்நாத்துக்கு செல்கிறார். பின்னர் விவசாயிகளுடன் உரையாடுகிறார். அவர் சோம்நாத்தில் நடைபெறும் பொது கூட்டம் ஒன்றிலும் பொதுமக்கள் முன்னிலையில் பேசுகிறார். இதனை தவிர்த்து, ஆகஸ்டு 6, 7 மற்றும் 10 ஆகிய நாட்களிலும் குஜராத்தில் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.


Next Story