டெல்லி மாநகராட்சி தேர்தல்; 50% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


டெல்லி மாநகராட்சி தேர்தல்; 50% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x

டெல்லி மாநகராட்சி தேர்தலில் 50% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.



புதுடெல்லி,


டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி தொடர்ந்து நடந்தது. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலுக்காக 13 ஆயிரத்து 638 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்தலில் 1.45 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன.

கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5.30 மணிவரை நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்குகள் பதிவாகி இருந்தன. மதியம் 2 மணிவரை மந்தகதியிலேயே வாக்கு பதிவு நடந்துள்ளது.

இதன்படி, மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதன்பின்பு, மாலை 4 மணிவரை டெல்லி மாநகராட்சி தேர்தலில் 45% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நடந்து முடிந்த மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


Next Story