மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு


மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x

மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்காக டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் நீதிபதியிடம் சி.பி.ஐ. தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், அடுத்த விசாரணை தேதிக்குள் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். மேலும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் பிப்.22 வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.


Next Story