'டெல்லி அரசாங்கம் சிறையில் இருந்து இயங்காது' - துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா


டெல்லி அரசாங்கம் சிறையில் இருந்து இயங்காது - துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா
x
தினத்தந்தி 27 March 2024 8:58 AM GMT (Updated: 27 March 2024 8:59 AM GMT)

சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ந்தேதி கைது செய்தது. தொடர்ந்து அவரை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனிடையே அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அதே சமயம், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும், அவரே டெல்லியின் முதல்-மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டெல்லி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், வி.கே.சக்சேனாவின் இந்த கருத்து தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.


Next Story