கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இருவர் கைது


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இருவர் கைது
x

கோப்புப்படம்

டெல்லியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி,

டெல்லியின் கிர்த்தி நகர் பகுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவின் மனைவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சைத்னயா சிவம் (வயது 18) மற்றும் விவேக் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று பிஎஸ் கிர்த்தி நகர் காவல் நிலையத்தில் நிதிஷ் ராணாவின் மனைவி மின்னஞ்சல் மூலம் புகார் செய்தார். அந்த புகாரில் அவர், 4-ந்தேதி இரவு சுமார் 8:30 மணியளவில் சத்தர்பூரிலிருந்து மாடல் டவுனுக்கு தனது காரில் டிரைவருடன் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

அப்போது கிர்த்தி நகர் பகுதியில் உள்ள சிக்னலில் காத்திருந்தபோது, அதிவேகமாக பைக்கில் வந்த இருவர் அவரது காருக்கு எதிரே பைக்கை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அவரை உற்றுப் பார்க்கத் தொடங்கினர். மேலும் கைகளால் அவரது காரின் மீது அடித்துள்ளனர். இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையின் போது, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரையும் அடையாளம் கண்டு அவர்களது வீட்டில் இருந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story