ராகுல் காந்தி நாட்டுக்காக போராடுகிறார்; எங்களது உண்ணாவிரத போராட்டம் தொடரும்: கார்கே பேட்டி


ராகுல் காந்தி நாட்டுக்காக போராடுகிறார்; எங்களது உண்ணாவிரத போராட்டம் தொடரும்:  கார்கே பேட்டி
x
தினத்தந்தி 26 March 2023 5:16 AM GMT (Updated: 26 March 2023 5:27 AM GMT)

ராகுல் காந்தி நாட்டுக்காக போராடுகிறார் என்றும் தொடர்ந்து எங்களது உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கார்கே செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து உள்ளார்.

புதுடெல்லி,


காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, வயநாடு தொகுதியில் நேற்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவும் கட்சி முடிவு செய்து உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி வதேரா, ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அக்கட்சி சார்பில் டெல்லி ராஜ்காட் பகுதியில் இன்று நாள் முழுவதும் சங்கல்ப சத்யாகிரகம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவானது. காங்கிரஸ் கட்சியின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர்.

எனினும், காங்கிரஸ் தலைவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் ராஜ்காட் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்ட பகுதிக்கு வருகை தந்தனர். பின்னர், அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இதுபற்றி கட்சி கூட்டத்திற்கு பின்னர் வெளியே வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது, ராகுல் காந்தியை பா.ஜ.க.வினர் பேச விடவில்லை.

ராகுல் காந்தி நாட்டுக்காக போராடி வருகிறார். பொது மக்களின் உரிமைக்காகவும் அவர் போராடுகிறார். அதனால், நாங்கள் நிறுத்த போவதில்லை.

தொடர்ந்து எங்களது உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கார்கே செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து உள்ளார். நாங்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உறுதியுடன் கூறினார்.


Next Story