பெங்களூருவில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வினியோகம்; மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் பேச்சு


பெங்களூருவில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வினியோகம்; மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் பேச்சு
x

பெங்களூருவில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் கூறினார்.

பெங்களூரு:

மரக்கன்றுகள்

பெங்களூரு மாநகராட்சியின் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கலந்து கொண்டார். விழாவில் ராகேஷ்சிங் பேசியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி வனத்துறையின் கட்டுப்பாட்டில் 16 மரக்கன்றுகளை வளர்க்கும் பகுதி உள்ளன. பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கத்தில் மொத்தம் 5.60 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021-22-ம் ஆண்டு பொதுமக்களுக்கு 1.60 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

மரத்தோப்புகள்

பெங்களூரு மாநகராட்சி எல்லையில் நடுவதற்காக 3 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு 5 லட்சம் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மரத்தோப்புகளை உருவாக்க 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் அதிகம் உற்பத்தி செய்யும் மரக்கன்றுகளை வளர்த்து நட முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. பெங்களூருவில் மரம் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ராகேஷ்சிங் பேசினார்.

இதில் சிறப்பு கமிஷனர் ராம் பிரசாத் மனோகர், வனத்துறை அதிகாரிகள் சரினா சிக்கலிங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story