டி.ஜே.ஹள்ளி வன்முறையில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி


டி.ஜே.ஹள்ளி வன்முறையில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
x

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்ய கோரி மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்ய கோரி மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டி.ஜே.ஹள்ளி வன்முறை

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வன்முறை நடைபெற்றிருந்தது. இந்த வன்முறையின் போது முன்னாள் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டுக்கும், ஏராளமான வாகனங்களுக்கும், போலீஸ் நிலையத்திற்கும் மர்மநபர்கள் தீவைத்தார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறை குறித்து முதலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதன்பிறகு, என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரிக்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில், என்.ஐ.ஏ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி முகமது கலீல் அகமது உள்ளிட்டோர் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மனு தள்ளுபடி

இந்த வழக்கு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி அளித்த அறிக்கைக்கும், என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அரசு வேண்டும் என்றே என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. எனவே என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாக பிரசன்னா, டி.ஜே.ஹள்ளி வன்முறையில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மறுத்து விட்டது. மேலும் அந்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story