துங்கா ஆற்றில் மூழ்கி கல்லூரி பேராசிரியர்கள் 2 பேர் சாவு


துங்கா ஆற்றில் மூழ்கி கல்லூரி பேராசிரியர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:45 PM GMT)

தீர்த்தஹள்ளி அருகே உள்ள துங்கா ஆற்றில் மூழ்கி கல்லூரி பேராசிரியர்கள் 2 பேர் இறந்தனர்.

சிவமொக்கா-

தீர்த்தஹள்ளி அருகே உள்ள துங்கா ஆற்றில் மூழ்கி கல்லூரி பேராசிரியர்கள் 2 பேர் இறந்தனர்.

கல்லூரி பேராசிரியர்கள்

உடுப்பி மாவட்டம் கார்கலா பகுதியை சேர்ந்தவர் புனித் (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவருடன் பாலாஜி என்பவரும் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் புனித் தனது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா தீர்த்த மத்தூர் கிராமத்துக்கு பாலாஜியுடன் சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்து அவர்கள் 2 பேரும் அருகில் உள்ள துங்கா ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். புனித், பாலாஜி ஆகியோர் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது புனித் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த பாலாஜி, புனித்தை காப்பாற்ற சென்றார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தீர்த்தஹள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆற்றில் மூழ்கி 2 பேர் சாவு

அவர்கள் ஆற்றில் குதித்து 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. பின்னர் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி புனித், பாலாஜியை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீர்த்தஹள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புனித், பாலாஜி ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீர்த்தஹள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story