ராமநகர் அருகே, குடிபோதையில் தகராறு:வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது


ராமநகர் அருகே, குடிபோதையில் தகராறு:வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:47 PM GMT)

ராமநகர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநகர் :-

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா திம்பதஹள்ளியை சேர்ந்தவர் அஜய்(வயது 26). இவர், பெங்களூரு பனசங்கரி அருகே பிரகதி லே-அவுட்டில் தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். சமீபகாலமாக தனது சொந்த கிராமமான திம்பதஹள்ளிக்கு அஜய் சென்றிருந்தார்.

அங்கு தனது தந்தை வீட்டில் அவர் தங்கி இருந்தார். அஜய் வீட்டையொட்டியே, அவரது பெரியப்பாக்களான ராஜண்ணா, மாரேகவுடா குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 20-ந் தேதி நள்ளிரவு மதுஅருந்திவிட்டு குடிபோதையில் பெரியப்பாக்களுடன் அஜய் சண்டை போட்டுள்ளார்.

இதுபற்றி கோடிஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஜயை சமாதானப்படுத்திவிட்டு சென்றிருந்தனர். பின்னர் நள்ளிரவில் மீண்டும் பெரியப்பாக்கள் ராஜண்ணா, மாரேகவுடாவுடன் அஜய் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ராஜண்ணா, மாரேகவுடா, ராஜண்ணாவின் மனைவி உள்ளிட்டோர் சேர்ந்து அஜயை ஆயுதங்களால் தாக்கினார்கள்.

இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார். உடனே 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். குடிபோதையில் தகராறு செய்ததால் அஜயை பெரியப்பாக்களே கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோடிஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜண்ணா, அவரது மனைவி, மாரேகவுடா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story