'இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை' என ராகுல்காந்தி கருத்து - ஜெய் சங்கர் பதிலடி


இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை என ராகுல்காந்தி கருத்து - ஜெய் சங்கர் பதிலடி
x

ராகுல்காந்தி கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று 'இந்தியாவுக்கான திட்டங்கள்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, நான் சில ஐரோப்பிய அதிகாரிகளிடம் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறை முழுவதும் மாறிவிட்டது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். எதையும் கேட்பதில்லை. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தற்போது (இந்திய அரசிடமிருந்து) என்ன உத்தரவு கிடைக்கிறதோ அதை எங்களிடம் அப்படியே தெரிவிக்கின்றனர். எங்களிடம் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படுவதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் என்னிடம் கூறுகின்றனர். நீங்கள் இவ்வாறு செய்யக்கூடாது' என்றார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பேசிய வீடியோவை பதிவிட்டு, ஆம் இந்திய வெளியுறவுத்துறையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆம், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றுகின்றனர். ஆம், வெளிநாடுகளின் கருத்துக்குகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுக்கிறது. இதற்கு பெயர் ஆணவம் அல்ல. இதற்கு பெயர் நம்பிக்கை. மேலும், இதற்கு பெயர் நாட்டு நலனை பாதுகாப்பதாகும்' என தெரிவித்துள்ளார்.


Next Story