தொடர் படுகொலை எதிரொலி: 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் இடமாற்றம்


தொடர் படுகொலை எதிரொலி:  177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் இடமாற்றம்
x

காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள், பண்டிட்டுகள் படுகொலைகளை முன்னிட்டு 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.



ஸ்ரீநகர்,


காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள், பண்டிட்டுகள் படுகொலைகளை முன்னிட்டு 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

காஷ்மீரில் சமீப நாட்களாக காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்வது அதிகரித்து வருகிறது.

அவற்றில், இந்து காஷ்மீரி பண்டிட்டுகள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இலக்காக கொள்ளப்பட்டு உள்ளனர். கடந்த மே 12ந்தேதி புத்காம் மாவட்டத்தின் சதூரா பகுதியில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல் பட் ராகுல் பட் என்ற காஷ்மீரி பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, 6 ஆயிரம் பணியாளர்கள் காஷ்மீரை தவிர்த்து வேறு இடங்களுக்கு தங்களை இடமாற்றம் செய்யும்படி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கடந்த மே 1ந்தேதியில் இருந்து இதுபோன்ற புலம்பெயர் தொழிலாளர்கள், பண்டிட்டுகளை இலக்குகளாக கொண்டு தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், கடந்த வியாழன் அன்று வங்கி ஊழியர் மற்றும் செங்கல் சூளை தொழிலாளர் என இருவர் சுட்டு கொல்லப்பட்டனர். மற்றொரு தொழிலாளருக்கு துப்பாக்கி சூட்டில் காயம் ஏற்பட்டது.

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் உள்ள எல்லாகுவாய் தெஹாதி வங்கியின் மேலாளராக பணியாற்றி வந்த ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் கொல்லப்பட்ட 8வது நபர் ஆவார். தொழிலாளர் 9வது நபர் ஆவார்.

இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியை சேர்ந்த ஆசிரியை ரஜ்னி பாலா (வயது 36) என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளி கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

சமீப நாட்களில் பண்டிட் சமூகத்தினர் தவிர, பொதுமக்கள், போலீசாரையும் பயங்கரவாதிகள் குறிவைத்து சுட்டு கொன்று வருகின்றனர். கடந்த 25ந்தேதி, ஒரு டி.வி. நடிகை அவரது வீட்டுக்கு வெளியே சுட்டு கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் பண்டிட்டுகள், புலம்பெயர் தொழிலாளர்களை இலக்காக கொண்டு தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில், வங்கி மேலாளர் படுகொலைக்கு பொறுப்பேற்ற பயங்கரவாத குழு எச்சரிக்கையும் விடுத்தது.

காஷ்மீரி பண்டிட்டுகளை இலக்காக கொண்டு நடந்து வரும் தொடர் தாக்குதலுக்கு கடந்த ஆண்டே ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியது என்ற அதிர்ச்சி தகவலையும் இந்திய உளவு அமைப்புகள் நேற்று தெரிவித்தன.

இதனால், தங்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றும்படி அரசு மற்றும் ஆசிரியர் பணியில் இருந்த பண்டிட்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை முன்னிட்டு 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றி அரசு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்த நிலையில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.


Next Story