சரத் பவார் கட்சியின் புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்


சரத் பவார் கட்சியின் புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்
x

சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை, சரத் பவார் நீக்கினார். ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்திருக்கிறார். இதனால், எங்களுடைய அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அறிவிக்க கோரினார்.

கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி அஜித் பவார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அஜித்துக்கு ஆதரவாக முடிவு அமைந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் கூடுதலாக நடந்த 10-க்கும் மேற்பட்ட விசாரணையின் நிறைவில் இந்த முடிவானது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. இதனால், மூத்த தலைவரான சரத் பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்த சூழலில், நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு, கட்சியின் பெயரை தேர்ந்தெடுக்கும்படி சரத் பவார் கேட்டு கொள்ளப்பட்டார். இன்றைக்குள், அவர்களுடைய கட்சியின் பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி, கேட்டு கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் இன்று ஒப்புதல் அளித்து உள்ளது.


Next Story