கர்நாடகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது


கர்நாடகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:45 PM GMT)

கர்நாடகத்தில் மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. யூனிட்டுக்கு 43 பைசா வரை அதிகரிக்கப்பட்டுள்ளளது.

பெங்களூரு:

மின் கட்டணம் உயர்வு

கர்நாடகத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை 1-ந் தேதியும், கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நிலக்கரி விலை உயர்வை காரணம் காட்டி கர்நாடகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்திருந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு யூனிட்டுக்கு 24 பைசாவில் இருநது 43 பைசா வரை உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அடிக்கடி மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு அரசு தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு கூறியதுடன், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

43 பைசா வரை உயர்வு

ஆனால் நிலக்கரி விலை உயர்வை ஒப்பிட்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது நிலக்கரி விலை உயர்ந்திருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்றும் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக அரசு அறிவித்தப்படி நேற்று மாநிலம் முழுவதும் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. பெஸ்காம் சார்பில் 43 பைசாவும், மெஸ்காம் சார்பில் 24 பைசாவும், செஸ்காம் சார்பில் 34 பைசாவும், ஹெஸ்காம் சார்பில் 35 பைசாவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அதாவது ஒரு யூனிட்டுக்கு 43 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளதால், 100 யூனிட்டுக்கு மேல் ஒரு வீட்டில் மின்சாரம் பயன்படுத்தினால், அந்த குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.43 கட்டணம் அதிகமாக வரும். கர்நாடகத்தில் மின் கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு மட்டும் 2-வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், அரசு மின் கட்டணத்தையும் உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story