இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளருக்கு ஜாமின்


இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளருக்கு ஜாமின்
x

அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

போர்ட் பிளேயர்,

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். இவர் தலைமை செயலாளராக இருந்தபோது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தலைமை செயலாளர் பங்களாவில் வைத்து ஜிதேந்திர நரைன் தனது கூட்டாளிகளான தொழிலதிபர் சந்தீப் சிங் என்ற ரிங்கு, முள்ளாள் தொழிலாளர் துறை இயக்குனர் ரிஷிஷ்வர்லால் ரிஷி ஆகியோருடன் சேர்ந்து 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த சமயத்தில் ஜிதேந்திர நரைன், டெல்லி நிதித்துறையின் தலைவராக பணியாற்றி வந்தார். ஜிதேந்திர நரைன் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அக்டோபர் 17-ம் தேதி அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதை தொடர்ந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஜிதேந்திர நரைன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். ஜிதேந்திர நரைன் கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

சிறப்பு விசாரணைக்குழு இந்த வழக்கு தொடர்பாக 935 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த 3-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைனுக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியுள்ளது. கொல்கத்தா ஐகோர்ட்டின் போர்ட் பிளேயர் கிளை கோர்ட்டு ஜிதேந்திர நரைனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

தேவையின் அந்தமான் நிகோபர் தீவுக்குள் நுழையக்கூடாது, சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் அதிகாரிகள் மீது தனது செல்வாக்கை பயன்படுத்தக்கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பிற்கோ, அதிகாரிகளுக்கோ அவர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளக்கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜிதேந்திர நரைனுக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியுள்ளது.


Next Story