கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஆழ்வார்குறிச்சியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி
கடையம்:
கடையம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகையா. இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் நேற்று காலை அம்பை - தென்காசி மெயின் ரோட்டில் ஆழ்வார்குறிச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகே வந்தபோது காரில் கியாஸ் தீர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெட்ரோலை திறக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் திடீரென தீப்பிடித்தது. இதனால் காரில் இருந்த அனைவரும் பதறியடித்து கீழே இறங்கி உயிர் தப்பினர். காரில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story