கர்நாடகத்தில் வானவியல் சுற்றுலா மையத்தை அமைத்த விவசாயியின் மகன்-பாராட்டுகள் குவிகிறது


கர்நாடகத்தில் வானவியல் சுற்றுலா மையத்தை அமைத்த விவசாயியின் மகன்-பாராட்டுகள் குவிகிறது
x

எம்.எஸ்.சி. பட்டம் பெற்ற நிலையில் விவசாயியின் மகன் ஒருவர் வானவியல் சுற்றுலா மையத்தை அமைத்தார். அவரது முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

ஹாவேரி:-

எம்.எஸ்.சி. பட்டதாரி

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சிக்காவி தாலுகா குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் கவுடா. இவர் உத்தர கன்னடா மாவட்டம் முண்டுகோடு அருகே நவிலட்டே மலைப்பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் 60 ஏக்கர் நிலத்தில் 'வானவியல் சுற்றுலா மையம்' அமைத்துள்ளார். விவசாயியின் மகனான நிரஞ்சன் கவுடா ஐதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி.(வானவியல் இயற்பியல்) படித்தார்.

அதில் நன்கு படித்த நிரஞ்சன்கவுடா சொந்தமான 'வானவியல் ஆய்வு மையம்' அமைக்க முயற்சி மேற்கொண்டார். அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளார். அவரது வானவியல் ஆய்வு மையத்தில் 6 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அக்டோபர் முதல் மே வரை...

அதன்மூலம் நட்சத்திரங்கள், அவற்றுக்கு இடையேயான இடைவெளிகள் ஆகியவற்றை காண முடியும் என்று சொல்லப்படுகிறது. மேலும் காற்று மாசு, ஒளி-ஒலி மாசு ஆகியவற்றையும் கணக்கிட முடியும் என்று நிரஞ்சன் கவுடா கூறினார். மேலும் கர்நாடகத்திலேயே பெங்களூருவில் தான் அதிக ஒளி மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகவும், காற்று மாசு ஏற்படுவதாகவும் அவர் தனது ஆய்வு மூலம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், 'நான் அமைத்துள்ள தொலைநோக்கிகள் மூலம் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை நட்சத்திரங்கள் ஆகியவற்றை காணலாம். அந்த கால கட்டம் தான் அதற்கு உகந்த தருணம். மழைக்காலங்களில் நட்சத்திரங்களை காண இயலாது' என்றார்.

பாராட்டுகள் குவிகிறது

இவரது வானவியல் சுற்றுலா மையத்துக்கு தற்போது அரசு பள்ளி மாணவர்கள் சென்று அங்குள்ள தொலைநோக்கிகள் மூலம் நட்சத்திரங்களை பார்த்து வியந்து வருகிறார்கள். நிரஞ்சன் கவுடாவின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


Next Story