மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி தந்தை-மகன் பலி


மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி தந்தை-மகன் பலி
x

கோலார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை-மகன் பலியாகினர். சிறுவன் ஒருவன் படுகாயமடைந்தான்.

கோலார் தங்கவயல்;

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் டவுனை சேர்ந்தவர் நிஜாம்(வயது 41) இவருக்கு திருமணம் முடிந்து இம்ரான் (13), இஸ்ரா(11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நிஜாம், 2 மகன்களையும் பள்ளிக்கூடத்திற்கு கொண்டு சென்றுவிட மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். சீனிவாசப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிஜாம், அவரது மூத்த மகனான சிறுவன் இம்ரான் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மற்றொரு மகனான இஸ்ரா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் ஓடிவந்து இஸ்ராவை மீட்டு சிகிச்சைக்காக கோலாரில் உள்ள ஜாலப்பா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவன் இஸ்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சீனிவாசப்பூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் பலியான தந்தை-மகனான நிஜாம், இம்ரானின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story