காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.! இறுதி வரை போராட்டம்..! - சசி தரூர்


காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.! இறுதி வரை போராட்டம்..! - சசி தரூர்
x

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்று, தேர்தலில் இருந்து விலகுவதாக கூறப்பட்டதை சசி தரூர் நிராகரித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சந்தித்து ஆதரவுகோரி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தாம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை திரும்பப் பெற மாட்டேன் என்று கூறினார்.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்று, தேர்தலில் இருந்து விலகுவதாக கூறப்பட்டதை சசி தரூர் நிராகரித்தார். அவர் கூறியிருப்பதாவது,

"நான் இன்று தேர்தலில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நான் ஒருபோதும் ஒரு சவாலில் இருந்து பின்வாங்குவதில்லை. இது முடிவடையும் வரையிலான போராட்டம்.

இது கட்சிக்குள் இருக்கும் நட்பு ரீதியான போட்டியாக இருக்கிறது. அக்டோபர் 17 ஆம் தேதி தயவுசெய்து வந்து வாக்களிக்கவும்" என்று கூறினார்.


Next Story