பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து


தினத்தந்தி 25 Jun 2022 3:16 AM GMT (Updated: 25 Jun 2022 6:13 AM GMT)

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சின்கா திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒருவேளை திரவுபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்? மற்றும் மிகவும் முக்கியமாக பாண்டவர்கள் யார்?' என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story