உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு - மத்திய அரசு தகவல்


உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு - மத்திய அரசு தகவல்
x

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் மற்றும் ரஷிய இடையே கடுமையான போர் ஏற்பட்ட நிலையில் அங்கு மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக சென்ற சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக நாடு திரும்பினர். உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் தாங்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நாடு திரும்பிய மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, தங்கள் கல்வியை சொந்த நாட்டிலேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்திருந்தது.

இதையடுத்து மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் உக்ரைனில் படித்து இந்தியாவில் எந்த மருத்துவ கல்லூரியிலும் சேராமல் இருக்கும் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, 2 தேர்வுகளை இந்தியாவில் எழுத வாய்ப்பளிப்பதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வு எழுதக்கூட மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு துறை சேவையில் இருக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவப் பாடத்திட்டத்தின் படிதான் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Next Story