டெல்லியில் வெள்ள பாதிப்பு; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு


டெல்லியில் வெள்ள பாதிப்பு; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி:  கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2023 2:33 PM GMT (Updated: 16 July 2023 4:10 PM GMT)

டெல்லியில் வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையை அடுத்து, யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக அபாய அளவை கடந்து நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நொய்டா ஆற்றங்கரை பகுதிகளில் 550 ஹெக்டேர் வரையிலான நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர். 8 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கால்நடைகள், நாய்கள், முயல்கள், வாத்துகள், சேவல்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மீட்கப்பட்டு உள்ளன.

45 ஆண்டுகளில் இல்லாத வகையில், யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், அபாய அளவை விட 2 மீட்டர் உயரம் என்ற அளவில் 207.68 மீட்டராக உயர்ந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

யமுனை ஆற்றில் வெள்ளநீர் வடிந்து விடும் என்று கூறப்பட்ட போதிலும், கனமழை பெய்ய கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கெஜ்ரிவால் இன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், யமுனை ஆற்றங்கரையில் வசித்து வரும் பல ஏழை குடும்பங்கள் வெள்ளத்திற்கு நிறைய பாதிப்புகளை சந்தித்து உள்ளன.

சில குடும்பங்களில், வீட்டில் உள்ள ஒட்டுமொத்த பொருட்களும் நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டன. அதனால், வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுமென கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

ஆதார் அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஆடைகள் மற்றும் புத்தகங்கள் அடித்து செல்லப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் சார்பில் அவை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.


Next Story