கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை அடித்து கொன்ற தொழிலாளி கைது


கள்ளத்தொடர்பை கைவிடாததால்  மனைவியை அடித்து கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 19 July 2023 6:46 PM GMT)

சிக்கமகளூரு-

கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

காபித் தோட்ட தொழிலாளி

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கல்மக்கி கிராமத்தை சேர்ந்தவர் சிவு (வயது35). இவரது மனைவி லீலாபாய் (33). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள காபித்தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் சிவு, லீலாபாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் லீலாபாய்க்கும் அதேப்பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் சிவுக்கு தெரியவந்தது. இதையடுத்து சிவு லீலாபாயிடம் தகராறு செய்துள்ளார்.மேலும் கள்ளத்தொடர்பை கைவிடும்படி மனைவி மற்றும் வாலிபரிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் 2 பேரும் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காபித் தோட்டத்திற்கு சிவு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது லீலாபாய், செல்போனில் வாலிபரிடம் பேசி கொண்டு இருந்தார். இதுகுறித்து சிவு மனைவியிடம் கேட்டார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில்...

இதில், ஆத்திரமடைந்த சிவு அருகே இருந்த கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், லீலாபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய சிவுவை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், பாலூர் பகுதியில் பதுங்கி இருந்த சிவுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story