தண்டவாளம் அருகே விளையாடியதால் விபரீதம்.. குழந்தைகள் உட்பட 4 பேர் ரெயில் மோதி பலி


தண்டவாளம் அருகே விளையாடியதால் விபரீதம்..  குழந்தைகள் உட்பட 4 பேர் ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 9 April 2024 10:51 AM GMT (Updated: 9 April 2024 11:43 AM GMT)

குழந்தைகள் விளையாடிக்கொண்டே தண்டவாள பகுதிக்கு சென்றனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மார்வா பகுதியை சேர்ந்தவர் சுனிதி தேவி (35), விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நீது தேவி (30) என்ற பெண்ணுடன் சேர்ந்து இன்று வயல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது சுனிதி தேவியின் குழந்தைகளான தில்பகர் (6) மற்றும் குஷி குமாரி (5) இருவரும் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியின் அருகே தண்டவாளம் இருந்துள்ளது. குழந்தைகள் விளையாடிக்கொண்டே தண்டவாள பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென தண்டவாளத்தில் அம்ரபாலி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. ரெயில் வருவதை கவனித்த சுனிதி தேவியும் நீது தேவியும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தண்டவாளத்தை நோக்கி ஓடினர்.

ஆனால் அதற்குள் வேகமாக வந்த ரெயில், குழந்தைகள் உட்பட 4 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரெயில் மோதி இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story