பஞ்சாப்பில் ஜூலை 1 முதல் இலவச மின்சாரம்; சட்டசபையில் நிதி மந்திரி அறிவிப்பு


பஞ்சாப்பில் ஜூலை 1 முதல் இலவச மின்சாரம்; சட்டசபையில் நிதி மந்திரி அறிவிப்பு
x

பஞ்சாப் சட்டசபையில் இன்று பேசிய நிதி மந்திரி ஹர்பால் சிங் சீமா, பொதுமக்களுக்கான இலவச மின்சாரம் வழங்கும் வாக்குறுதி வருகிற ஜூலை 1ந்தேதியில் இருந்து நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.



சண்டிகர்,



பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16ந்தேதி முறைப்படி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார். இதனை தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன்படி, பதவியேற்றதும் கடந்த மார்ச் மாதத்தில், வீடு தேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் ஒன்றை பகவந்த் மான் அறிமுகப்படுத்தினார். ஆம் ஆத்மியின் தேர்தல் அறிவிப்பில் முக்கிய அம்சம் ஆக இந்த திட்டமும் இடம் பெற்றிருந்தது.

கடந்த ஆண்டு ஜூனில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், பஞ்சாப்புக்கு பிரசாரத்துக்கு வந்தபோது, நாங்கள் ஆட்சி அமைத்தால் இலவச மின்சார வினியோக திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். இந்த சூழலில், அக்கட்சி ஆட்சியை பிடித்தது.

இதனை தொடர்ந்து, பஞ்சாப்பில் உள்ள உயரதிகாரிகளிடம் இலவச மின்சார வினியோக திட்ட நிறைவேற்றம் பற்றி கெஜ்ரிவால் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், பஞ்சாப் மாநில மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தொடர்பு கொண்டு பேசியது முதல், மின் கட்டண தொகையை ஏற்பது வரை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு விட கூடாது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பஞ்சாப்பில் கடந்த 2016ம் ஆண்டு முதல், காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கான இலவச மின்வினியோகம் இருந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, எஸ்.சி., பி.சி. பிரிவினர் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருகின்றனர். ஆம் ஆத்மியின் இலவச மின் வினியோக திட்ட உறுதிமொழியின்படி, பொருளாதார வேற்றுமையின்றி, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

இதனால், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருவோர் அனைவரும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவார்கள். 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மேற்குறிப்பிட்ட வகையினர், கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இதுவரை மின்சார பலன்கள் பெறாத மற்றவர்கள் அனைவரும் மாதத்திற்கு 300 யூனிட்டுகளை இனி பெற்று கொள்ள முடியும். ஆனால், மாதம் ஒன்றுக்கு 300 யூனிட்டுகளுக்கு கூடுதலாக மின்நுகர்வு ஏற்பட்டால், அவர்கள் மொத்த மின்உபயோகத்திற்கான கட்டணமும் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், நிதி மந்திரி ஹர்பால் சிங் சீமா ஆண்டு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசுகிறார். இந்த ஆண்டில் ஆம் ஆத்மி அரசு காகிதமில்லா பட்ஜெட்டை வழங்குகிறது.

பட்ஜெட் உரையை ஆற்றிய நிதி மந்திரி ஹர்பால் சிங் பேசும்போது, பஞ்சாப்பில் சொந்த வரி வருவாய் 42 சதவீதத்தில் இருந்து 72 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது. நடப்பு 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் செலவினம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 860 கோடி ஆகும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் கூறும்போது, பொதுமக்களுக்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான வாக்குறுதி வருகிற ஜூலை 1ந்தேதியில் இருந்து நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.


Next Story