ஜி-20 உச்சி மாநாடு; ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு என பரவிய தகவலால் பரபரப்பு


ஜி-20 உச்சி மாநாடு; ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு என பரவிய தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Sep 2023 10:42 AM GMT (Updated: 9 Sep 2023 10:47 AM GMT)

ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என தகவல் பரவியது பரபரப்பு ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுதவிரவும், பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

ஜி-20 உச்சி மாநாட்டுக்கான தலைமையை கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி இந்தியா முறைப்படி ஏற்ற பின்பு, நாடு முழுவதும் 60 நகரங்களில் ஜி-20 தொடர்புடைய 200 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. கூட்டத்தில் வெளிநாடுகளை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் சூழலில், டெல்லி போலீசாருக்கு திடீரென தொலைபேசி அழைப்பு ஒன்று இன்று வந்தது. அதில், ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். உள்ளூர் போலீசார், மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு சென்றனர். இந்த சோதனையில், எதுவும் கண்டறியப்படவில்லை. அந்த பகுதியில் பை ஒன்று நீண்டநேரம் கவனிக்கப்படாமல் கிடந்துள்ளது.

இதனை பார்த்த நபர் ஒருவர் போலீசுக்கு அழைப்பு விடுத்து, பையில் வெடிகுண்டு இருக்க கூடும் என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்தே சோதனை நடந்துள்ளது. பின்னர் அது வெறும் புரளி என தெரிய வந்தது.

எனினும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க டெல்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்த ராஜ்காட் பகுதியில் மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை ஆகியவையும் குவிக்கப்பட்டு உள்ளன.

இந்திய ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு படையில், வெடிகுண்டுகள் பற்றிய நிபுணத்துவம் வாய்ந்த என்ஜினீயர்கள் உதவியுடன் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.


Next Story