576 தாய்மொழிகள் குறித்து மத்திய அரசு ஆய்வு: உள்துறை அமைச்சகம் தகவல்


576 தாய்மொழிகள் குறித்து மத்திய அரசு ஆய்வு: உள்துறை அமைச்சகம் தகவல்
x

கோப்புப்படம்

576 தாய்மொழிகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

6-வது ஐந்தாண்டு திட்டத்தில் இருந்து வழக்கமான ஆராய்ச்சி நடவடிக்கையாக, மொழியியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, தாய்மொழி பேச்சு தரவுகள் வீடியோவாக படம் பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு தாய்மொழியின் மூலச்சுவையை பாதுகாக்கவும், ஆய்வு செய்யவும் தேசிய தகவல் மையத்தில் இணைய காப்பகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய தகவல் மைய சர்வரில், இந்த வீடியோ தரவுகள், பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இதுவரை 576 மொழிகள் மற்றும் வட்டார வழக்குகளை பற்றிய தாய்மொழி ஆய்வை நிறைவு செய்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் தாய்மொழி ஆய்வுக்கான களப்பணி நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது. இமாசலபிரதேசத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

மேலும், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை சுமுகமாக நடத்துவதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், கிராமங்கள், நகரங்கள், வார்டுகள் ஆகியவற்றை துல்லியமாக பிரித்து காட்டும் வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 6 லட்சம் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.


Next Story