மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூ.70 ஆக குறைத்த மத்திய அரசு


மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை  ரூ.70 ஆக குறைத்த மத்திய அரசு
x

கோப்புப்படம்

மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை மத்திய அரசு ரூ.80-ல் இருந்து ரூ.70 ஆக குறைத்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது.

விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க தக்காளியை கொள்முதல் செய்து விற்குமாறு மத்திய அரசுக்கு சொந்தமான 'நபெட்', 'என்.சி.சி.எப்.' ஆகிய கூட்டுறவு அமைப்புகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

அதன்படி, அந்த அமைப்புகள், ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் உள்ள தக்காளி மண்டிகளில் தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து பல்வேறு நகரங்களில் விற்று வருகின்றன. இதுவரை 391 டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.70 ஆக குறைப்பு

கடந்த 14-ந் தேதி மானிய விலை சில்லரை விற்பனை தொடங்கியது. முதலில் கிலோ ரூ.90 ஆக விற்கப்பட்டது. கடந்த 16-ந் தேதி, கிலோ ரூ.80 ஆக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தக்காளி விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, மானிய விலை தக்காளியை கிலோ ரூ.70 ஆக குறைத்து விற்குமாறு 'நபெட்' உள்ளிட்ட 2 அமைப்புகளுக்கும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) முதல், கிலோ ரூ.70 என்ற விலைகுறைப்பு அமலுக்கு வருகிறது.


Next Story