பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கவர்னரின் கார் டிரைவர் மாரடைப்பால் சாவு


பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கவர்னரின் கார் டிரைவர் மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:47 PM GMT)

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் கார் டிரைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கவர்னரை காரில் அழைத்து வர சென்ற போது இந்த சம்பவம் நடந்திருந்தது.

பெங்களூரு:

கவர்னர் கெலாட்

கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் தாவர்சந்த் கெலாட். இவரிடம் கார் டிரைவராக இருந்து வருபவர் ரவிக்குமார். நேற்று முன்தினம் தார்வாரில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அங்கு சென்றிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் விமானம் மூலமாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தாவர்சந்த் கெலாட்டை காரில் அழைத்து செல்வதற்காக டிரைவர் ரவிக்குமார் வந்திருந்தார். விமான நிலையில் மிகமிக முக்கிய நபர்களை அழைத்து செல்லும் பகுதியில் ரவிக்குமார் நின்று கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.

கார் டிரைவர் சாவு

உடனடியாக அவருக்கு விமான நிலையத்தில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் ரவிக்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் இறந்துவிட்டார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் வேறு ஒரு காரில் விமான நிலையத்தில் இருந்து கவர்னர் தாவர்சந்த் கெலாட், ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பாகவே கவர்னர் கெலாட் வந்து, டிரைவருடன் காரில் ஏறி சென்றிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story