பணிபுரியும் பெண்களுக்கு மேலும் 50 விடுதிகள்: மத்திய அரசு திட்டம்


பணிபுரியும் பெண்களுக்கு மேலும் 50 விடுதிகள்: மத்திய அரசு திட்டம்
x

கோப்புப்படம்

பணிபுரியும் பெண்களுக்கு கூடுதலாக மேலும் 50 விடுதிகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் "பணிபுரியும் மகளிர் விடுதிகள் திட்டம்" என்கிற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுதிகளைத் திறக்க மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் 972 தங்கும் விடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அவற்றில் 497 விடுதிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கூடுதலாக 50 தங்கும் விடுதிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிகள் திட்டம் 'சகி நிவாஸ்' என மறுபெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது தனியாக இருக்கும் பெண்கள், உயர்கல்வி படிக்கும் பெண்கள் ஆகியோரின் அடிப்படையில் வரும்காலத்தில் விரிவுபடுத்தப்படும். தற்போது பணிபுரியும் பெண்களின் தேவைகள் மற்றும் இருப்பிடத் தேவைகளின் அடிப்படையில் வாடகை மாதிரியில் இயங்கும் வகையில் சுமார் 50 தங்கும் விடுதிகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.


Next Story