மார்ச் மாதத்தில் ரூ.1.60 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்


மார்ச் மாதத்தில் ரூ.1.60 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்
x

கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி உள்ளது.

இந்தியாவில் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

ஜி.எஸ்.டி. அமலான காலம்தொட்டு இதுதான் 2-வது அதிகபட்ச வசூல் ஆகும். மேலும் முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் மிக அதிகளவில், ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடி அளவுக்கு இருந்தது. கடந்த மார்ச் மாத ஜி.எஸ்.டி. வசூலில், மத்திய ஜி.எஸ்.டி. ரூ.29 ஆயிரத்து 546 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.37 ஆயிரத்து 314 கோடியும் வசூலாகி இருக்கிறது.

ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.82 ஆயிரத்து 907 கோடி ஆகும். இதில் பொருட்கள் இறக்குமதி வரி ரூ.42 ஆயிரத்து 503 கோடியும், செஸ் வரி ரூ.10 ஆயிரத்து 355 கோடியும் அடங்கும்.

2022-23 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.18 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம் ஆகும். மாதாந்திர சராசரி என்று எடுத்துக்கொண்டால் ரூ.1.51 லட்சம் கோடி ஆகும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல், கடந்த மார்ச் மாதம் இதுவரையில் இல்லாத வகையில் அதிகளவில் அமைந்துள்ளது.


Next Story