குஜராத் கோர விபத்து - "மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும்" - காங். தலைவர் வேண்டுகோள்


குஜராத் கோர விபத்து - மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் - காங். தலைவர் வேண்டுகோள்
x

குஜராத் கோர விபத்தில் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சில மாதங்களுக்கு முன்பு அப்பாலம் மறுசீரமைக்கப்பட்டது. அப்பணி முடிந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று இரவு 'சத்' பூஜைக்காக ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் பொத பொதவென விழுந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. 177 பேர் மீட்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காணாமல் போனவர்களை ராணுவம், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் விபத்து சம்பவம் தன்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளிலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story