பீகாரில் கோஷ்டி மோதலில் துப்பாக்கி சண்டை; 3 பேர் உயிரிழப்பு


பீகாரில் கோஷ்டி மோதலில் துப்பாக்கி சண்டை; 3 பேர் உயிரிழப்பு
x

இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சூரன்காபர் என்ற கிராமத்தில் ரூ.400 பால் பாக்கி தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பதுஹா பகுதியில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. அப்போது ரூ.400 பால் பாக்கி தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு உருவானது. அதனை தொடர்ந்து இருதரப்பினரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து ஒருவரையொருவர் சுடத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேரை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story