முகலாயர்கள் வரலாறு குறித்த பாடம் நீக்கப்பட்டதா? - என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் விளக்கம்


முகலாயர்கள் வரலாறு குறித்த பாடம் நீக்கப்பட்டதா? - என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் விளக்கம்
x

முகலாயர்கள் வரலாறு குறித்து எழுந்த சர்ச்சைக்கு என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி விளக்களித்துள்ளார்.

புதுடெல்லி,

என்.சி.இ.ஆர்.டி.யின் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து முகலாய மன்னர்களின் வரலாற்று பகுதி நீக்கம் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி, 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி மற்றும் கலாச்சார மோதல் தொடர்பான பகுதிகளை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி செய்தியாளர்களிடம் விளக்களித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;-

"12-ம் வகுப்பு மாணவர்களுக்காக என்.சி.இ.ஆர்.டி. தயாரித்துள்ள வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் வரலாறு நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. அது ஒரு பொய்.


கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு அளித்த பரிந்துரையில், மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பாடங்களை நீக்கக் கூடாது என்றும், சுமையாக உள்ள பகுதிகளை நீக்கலாம் என்றும் தெரிவித்தது.

தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டல்படி நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. நாங்கள் அதனை அமல்பபடுத்துகிறோம்.

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் இறுதி செய்யப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி பாடப்புத்தகங்கள் 2024-ல் அச்சிடப்படும். தற்போதைக்கு நாங்கள் எதையும் கைவிடவில்லை.

முகலாயர்களின் வரலாற்றை பாடப் புத்தகத்தில் இருந்து என்.சி.இ.ஆர்.டி. நீக்கவிட்டதாக எழுந்துள்ள விவாதம் தேவையற்றது. இது குறித்து தெரியாதவர்கள், பாடப் புத்தகத்தைப் பார்த்துக்கொள்ளலாம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story