நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கைவிட்டார்; காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம்


நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கைவிட்டார்; காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம்
x
தினத்தந்தி 25 Sep 2022 7:45 AM GMT (Updated: 25 Sep 2022 7:45 AM GMT)

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கைவிட்ட காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம் அடைந்துள்ளார்.

உப்பள்ளி;


திருமண நிச்சயதார்த்தம்

உப்பள்ளி டவுன் உன்கல் பகுதியில் உள்ள ஸ்ரீசாய் நகரில் வசிப்பவர் அனில் (வயது 27). இவரும் தாஜ் நகரில் வசித்து வரும் அனிதா (23) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். மேலும் பல இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் தங்களின் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். இதற்கு அவர்களும் சம்மதித்துள்ளனர்.

அதன்பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் 2 பேருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருந்தது.

கைவிட்டார்

இந்த நிலையில், அனிலின் சகோதரி, அனிலின் மனதை மாற்றி அவரது மகளை திருமணம் ெசய்து வைக்க முடிவு செய்தார். இந்த நிலையில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அனில், அனிதாவை கைவிட்டார். இதனால் அனிதா அதிர்ச்சி அடைந்தார். அனிதாவுக்கு தந்தை கிடையாது. தாய் மட்டும் உள்ளார். இந்த நிலையில் அனிதாவும் அவரது தாயும், அனில் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் பணம் தருகிறோம். விலகி விடுமாறு கூறியுள்ளனர். மேலும், அனிலிடம் அனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். அப்போது அனிலும், அனிதாவை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் அனிதா மனமுடைந்து காணப்பட்டார்.

போலீசில் புகார்

இந்த நிலையில் அனிதாவும், அவரது தாயும் வித்யாநகர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அனில் மீது புகார் கொடுத்தனர். அதில், அனிலும், நானும் பழகியது ஊருக்கே தெரியும். இனி என்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள். எனக்கு நீதி வேண்டும். காதலன் அனிலுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

அப்போது அனிலுடன் பழகியபோது எடுத்த படத்தையும், நிச்சயதார்த்தம் நடந்த படத்தையும் அனிதா போலீசாரிடம் காண்பித்தார். இதுகுறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story