டெல்லியில் 8 முறை யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்ற தலைமைக் காவலர்


டெல்லியில் 8 முறை யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்ற தலைமைக் காவலர்
x

8-வது முறையாக யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தலைமைக் காவலர் ராம் பஜன் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி தெற்கு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் ராம் பஜன் குமார்(வயது 34). இவர் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டே யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். அண்மையில் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ராம் பஜன் குமார் 667-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

8-வது முறையாக யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி ராம் பஜன் குமார் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான ராம் பஜன் குமார், டெல்லியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். காவல்துறையில் பணியாற்றி வரும் இவர், கிடைக்கும் நேரங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக விடாமுயற்சியுடன் படித்து வந்துள்ளார். தனது முயற்சிகளுக்கு தனது மனைவி மிகவும் உறுதுணையாக இருந்ததாக ராம் பஜன் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த ராம் பஜன் குமார், அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று தலைமைக் காவலர் ஆனார். இதனிடையே தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக இவர் தொடர்ந்து படித்து வந்துள்ளார். தற்போது தேர்வில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், கூடுதல் மதிப்பெண்கள் பெறும் நோக்கில் ராம் பஜன் குமார் மீண்டும் தேர்வு எழுத உள்ளார். இதற்கான முதற்கட்ட தேர்வு வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக ராம் பஜன் குமார் தற்போது தயாராகி வருகிறார்.


Next Story