தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு...மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு...மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x

கடுமையான பனிமூட்டம் காரணமாக டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் பல ரெயில்கள் தாமதமாக வந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

புதுடெல்லி,

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் பகல் நேரங்களிலும் முகப்புவிளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.

கடுமையான பனிமூட்டம் காரணமாக டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் பல ரெயில்கள் தாமதமாக வந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லி செல்லும் 23 ரெயில்கள் ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாகச் சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடும் பனிப்பொழிவால் டெல்லியில் உள்ள தெருக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் குளிரை தனிப்பதற்காக நெருப்பை மூட்டி அதில் அவர்கள் குளிரை தனித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வட இந்திய மாநிலங்களில் கடுமையாக பனிப்பொழிவு நீடிக்கும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்று பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.


Next Story