காஷ்மீரில் கனமழை : அமர்நாத் யாத்ரீகர்கள் அவதி


காஷ்மீரில் கனமழை : அமர்நாத் யாத்ரீகர்கள் அவதி
x
தினத்தந்தி 27 July 2023 8:31 AM GMT (Updated: 27 July 2023 9:15 AM GMT)

காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் அமர்நாத் செல்லும் யாத்ரீகர்கள் அவதியடைந்துள்ளனர்.

ஜம்மு,

இமயமலையின் தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 61 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடைபெறும். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31 வரை நடைபெற உள்ளது.

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரையில் இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 11 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 3,111 பேர் அடங்கிய அடுத்த குழு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். அதில் பால்தால் மற்றும் பஹல்காம் வழியாக 2,303 ஆண்கள், 750 பெண்கள், 11 குழந்தைகள், 47 சாதுக்கள் சென்றுள்ளனர். இந்த இரண்டு பாதையிலும் கனமழை பெய்து வருவதால், பலத்த பாதுகாப்புடன் யாத்ரீகர்கள் குகைக் கோயிலை நோக்கி சென்றனர்.

இடைவிடாமல் பெய்த மழையால் குகைக்கான மலையேற்றத்தில் உள்ள கெல்னாரில் பாலம் ஒன்று சேதமடைந்ததாகவும், ஆனால் உடனடியாக அது சரிசெய்யப்பட்டு விட்டதாக ஆலய வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் வசதிக்காக இரண்டு பாதையிலும், ஹெலிகாப்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story