'சந்திரயான் 3' திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த பொறியாளரின் தற்போதைய நிலை..!


சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த பொறியாளரின் தற்போதைய நிலை..!
x

சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்க உதவிய ஹெச்இசி டெக்னீஷியன் இப்போது இட்லி விற்கிறார்.

ராஞ்சி,

நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலம் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது.

இந்த சந்திரயான்-3 திட்டத்தின் உருவாக்கத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கு கொண்டன. அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெச்இசி எனும் பொதுத்துறை நிறுவனம்.

இந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் ஒரு தொழில்நுட்ப பணியாளர், மத்திய பிரதேச ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா. இவரும் ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததால், சுமார் 18-மாத காலமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்கள் உட்பட தனது 2800 ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலவில்லை. இதனால், தீபக் குமாரின் இரு மகள்களுக்கு பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டார்.

நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டித்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார். காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.

இந்தியர்கள் நிலவை தொட்டதாக பெருமைப்பட்டு கொள்ளும் அதே வேளையில் அதற்காக பாடுபட்டவர்கள் சாலையோரம் வந்து விட்ட பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.

1 More update

Next Story