பெங்களூரு அருகே பயங்கரம் பெண்ணை கொன்று, கணவர் தற்கொலை


பெங்களூரு அருகே பயங்கரம் பெண்ணை கொன்று, கணவர் தற்கொலை
x

பெங்களூரு அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக இந்த விபரீதம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆனேக்கல்:-

பெண் வெட்டிக்கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிக்கனஹள்ளி அருகே ஜனதா காலனியில் வசித்து வந்தவர் வெங்கடசாமி(வயது 53). இவரது மனைவி லட்சுமி(48). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி கணவருடன் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். வெங்கடசாமியும், லட்சுமியும் கூலி வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு கணவன், மனைவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சாதாரண விஷயத்திற்கு அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த வெங்கடசாமி வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து மனைவி லட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த லட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

கணவர் விஷம் குடித்தார்

ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டோமே என்று வீட்டில் கிடந்த விஷத்தை எடுத்து வெங்கடசாமியும் குடித்து விட்டார். இதனால் அவரும் வாயில் நுரை தள்ளி இறந்து விட்டார். கணவன், மனைவி வீட்டிற்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சர்ஜாப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வெங்கடசாமி மற்றும் லட்சுமியின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சாதாரண குடும்ப சண்டையில் லட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வெங்கடசாமியும் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சர்ஜாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story