முதல் மந்திரி பதவி கேட்டு மிரட்ட மாட்டேன்: டெல்லி செல்லும் முன் டிகே சிவக்குமார் பரபரப்பு பேட்டி


முதல் மந்திரி பதவி கேட்டு மிரட்ட மாட்டேன்: டெல்லி செல்லும் முன் டிகே சிவக்குமார் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 16 May 2023 4:47 AM GMT (Updated: 16 May 2023 5:57 AM GMT)

முதல் மந்திரி பதவியை கேட்டு யாரையும் மிரட்ட மாட்டேன். யாரையும் பிரிக்க விரும்பவில்லை. முதுகில் குத்த மாட்டேன் என்று டெல்லி செல்லும் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரித்து கருத்து கூறி இருப்பதாகவும், அதனால் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இது ஒருபுறம் இருக்க, ஒக்கலிகர் சங்கம், டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த சமூக மடாதிபதிகள் நிர்மலானந்தநாத சுவாமி, நஞ்சாவதூத சுவாமி மற்றும் லிங்காயத் மடாதிபதிகள் என 20 மடாதிபதிகள் பகிரங்கமாகவே டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார். சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் பேசப்பட்டது.

கர்நாட அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கட்சியின் அழைப்பை ஏற்று இன்று டெல்லிக்கு டிகே சிவக்குமார் புறப்பட்டுள்ளார். டெல்லி செல்லும் முன் டிகே சிவக்குமார் அளித்த பேட்டியில், " முதல் மந்திரி பதவியை கேட்டு யாரையும் மிரட்ட மாட்டேன். யாரையும் பிரிக்க விரும்பவில்லை. முதுகில் குத்த மாட்டேன். வரலாற்றில் தவறான இடத்தை பிடிக்க விரும்பவில்லை. எங்களது அடுத்த சவால் மக்களவை தேர்தலில் 20 தொகுதியில் வெற்றி பெறுவதுதான். காங்கிரஸ் கட்சி எனது. ஒரு தாய்க்கு குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். கர்நாடக முதல் மந்திரி பேச்சுவார்த்தை தொடர்பாக நான் டெல்லி செல்கிறேன். கட்சி தலைமை என்னை மட்டும் வரச்சொன்னதால் நான் மட்டும் தனியாக செல்கிறேன்" என்றார்.


Next Story