சட்டப்படி நடப்பவன்; வழக்கை எதிர்கொள்வேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டி


சட்டப்படி நடப்பவன்; வழக்கை எதிர்கொள்வேன்:  பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டி
x

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்துவதற்கு பதிலாக, எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முன்னாள் மாநில மற்றும் மத்திய மந்திரிகள் வலியுறுத்துவது துரதிர்ஷ்டம் வாய்ந்தது என ரகுநந்தன் ராவ் கூறியுள்ளார்.



ஐதராபாத்,



தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த மே மாதம் 28ந்தேதி ஒரு தனியார் கிளப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய 17 வயது சிறுமியை 5 பேர் அழைத்து சென்று, காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவு ஆகியுள்ளார். அவரை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரில் 3 பேர் மைனர் ஆவார்கள். மற்ற இருவர், சாதுதீன் மாலிக் மற்றும் உமர்கான் ஆவர். இவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என கூறப்படுகிறது.

குறிப்பாக ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் தோழமை கட்சியான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்ததாக கூறப்படுகிற சொகுசு கார், தெலுங்கானா மாநில அரசில் முக்கிய பங்கு வகிக்கிற தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் ஒருவருக்கு உரியது என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒன்றாக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரகுநந்தன் ராவ் சில வினாடிகள் ஓட கூடிய வீடியோ ஒன்றை இரு தினங்களுக்கு முன் வெளியிட்டார்.

அதில் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் மைனர் சிறுவன் ஆகியோரின் புகைப்படங்களும் இருந்தன. இதுபற்றி ராவ் கூறும்போது, இந்த மைனர் சிறுவனுக்கு வழக்கில் தொடர்பில்லை என போலீசார் அவசர அவசரம் ஆக கூறுகின்றனர். அந்த சிறுவன் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரின் மகன்.

சிறுவனுக்கு தொடர்பில்லை என போலீசார் கூறிய நிலையிலேயே, இந்த சான்றுகளை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது என கூறினார். எம்.எல்.ஏ.வின் மகனுக்கு வழக்கில் தொடர்பு உள்ளது என்பதற்கான வீடியோ சான்று என்னிடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் டுவிட்டரில், பலாத்கார வழக்கின் குற்றவாளிகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வின் மகனும் உண்டு.

ஆனால், இந்த வீடியோவை வெளியிட்டு, வழக்கு, சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு ரகுநந்தன் நியாயமற்ற ஒன்றை செய்து விட்டார். பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுக்கு இடையேயான புனிதமற்ற உறவால் இப்படி செய்யப்பட்டு உள்ளதா? ஒரு சிறுமிக்கு கிடைக்கும் நீதியை விட உங்களது பிணைப்பு முக்கியத்துவம் பெற்று விட்டதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், வழக்கில் 17 வயது சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரகுநந்தன் ராவ் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறுமியின் வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டதற்காக இந்திய தண்டனை சட்டம் 228ஏ பிரிவின் கீழ் (பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை வெளியிடுதல்) அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, ராவ் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் செயல்படுவதுடன், பாதிக்கப்பட்ட நபருக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என அவருக்கு எதிரான புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரகுநந்தன் ராவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் குடிமகன் நான். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். எனக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கட்சி எனக்கு ஆதரவாக உள்ளது என கூறியுள்ளார்.

அதற்கு முன், ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது பற்றி கேட்டதற்கு பதிலளித்த ராவ், பாதிக்கப்பட்டவரின் முகம் அல்லது அடையாளம் எதனையும் நான் வெளியிடவில்லை என கூறியுள்ளார்.

உண்மையில், ராவ் வீடியோ வெளியிடுவதற்கு முன் அனைத்து தெலுங்கு செய்தி சேனல்களிலும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி, அதில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றவாளிகளும் இடம் பெற்று இருந்தனர்.

இந்நிலையில், ராவ் கூறும்போது, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதற்கு பதிலாக, எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் மாநில மற்றும் மத்திய மந்திரிகள் வலியுறுத்துவது என்பது துரதிர்ஷ்டம் வாய்ந்தது என கூறியுள்ளார்.


Next Story