எனது பதவி காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவேன்


எனது பதவி காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவேன்
x

எனது பதவி காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவேன் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு:-

அனுபவம் முக்கியம்

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் அரசு பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா வந்தார். அங்கு குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பேச்சை விட அனுபவம் முக்கியம். அனுபவத்துடன் எனது துறையை சிறந்த முறையில் நிர்வகிப்பேன். முதல்-மந்திரி சித்தராமையா என் மீது நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். அந்த பொறுப்பை சிறப்பான முறையில் நிர்வகிக்க நான் எனது சக்தியை மீறி பணியாற்றுவேன். தற்போது இந்த பி.டி.எம். லே-அவுட் பள்ளியில் 426 குழந்தைகள் படிக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வாய்ப்புகள்

இதனால் அரசு பள்ளிகளை இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த பள்ளியே ஒரு உதாரணம். நகரங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் உள்ளன. இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைக்கின்றன. ஆனால் கிராமப்புறங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன. இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் சவால் உள்ளது.

எனது பதவி காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியை நான் செய்வேன். நாங்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வளர்ச்சியை ஏற்படுத்துவோம். குழந்தைகளுக்கு புத்தக பை சுமையை குறைத்து அவர்களின் அறிவுத்திறனை வளர்க்க வேண்டியது அவசியம். பள்ளி குழந்தைகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயன் கிடைக்கும்

60 லட்சம் குழந்தைகளுக்கு இதன் பயன் கிடைக்கும். இதற்காக பள்ளி குழந்தைகள் சார்பில் முதல்-மந்திரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகள் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மது பங்காரப்பா பேசினார்.


Next Story