அரசிடம் இருந்து முடிவு வரவில்லை எனில்... 4-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி


அரசிடம் இருந்து முடிவு வரவில்லை எனில்... 4-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி
x

விவசாய பிரதிநிதிகளுடன் ஒரு ஆக்கப்பூர்வ மற்றும் விரிவான விவாதம் நடைபெற்றது என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

சண்டிகார்,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதே சமயத்தில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

இந்த சூழலில், டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லிக்கு படையெடுத்தனர்.

இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட மந்திரிகளுடன் விவசாய சங்கத்தினர் 8, 12 மற்றும் 15 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால், அதில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று (ஞாயிற்று கிழமை) 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் பஞ்சாப் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் பாந்தர் கூறும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய அரசின் முன்மொழிதலை பற்றி அடுத்த 2 நாட்களில் நாங்கள் ஆலோசனை மேற்கொள்வோம். அரசும் பிற கோரிக்கைகளை பற்றி தீர ஆலோசனை மேற்கொள்ளும்.

இதில், முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்றால், எங்களுடைய டெல்லி செல்லும் பேரணியை 21-ந்தேதி நாங்கள் தொடருவோம் என்று கூறியுள்ளார். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லி செல்லும் போராட்டம் தொடரும் என விவசாய சங்க தலைவர் ஜகஜித் சிங் தல்லேவால் கூறினார்.

இதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், விவசாய பிரதிநிதிகளுடன் ஒரு ஆக்கப்பூர்வ மற்றும் விரிவான விவாதம் நடைபெற்றது. அரசின் முன்மொழிவுகளை பற்றிய அவர்களின் முடிவை விவசாய தலைவர்கள் நாளை அறிவிப்பார்கள் என்று கூறினார்.


Next Story